வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Advertisement

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.

Advertisement

அதை பயன்படுத்திய ஹசன் 38 ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.

சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.

Advertisement

ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும். சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்” என்று தெரிவித்தார்.

அவர் கூறியதை கேப்டன் ரோஹித் சர்மாவும் போட்டியில் முடிவில் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிராக எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸை அற்புதமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்த ராகுல் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் கூட பேட்டிங்கில் 73 ரன்கள் எடுத்த அவர் நீண்ட நாட்களுக்கு முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்ததால் துரதிஷ்டவசமாக கேட்ச்சை தவற விட்டார் என்பதால் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல என்பதே நிதர்சனம்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News