மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வந்த இத்தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த இந்திய மகளிர் அணி, முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 13, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 27 என குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 ரன்களோடும், அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. தாய்லாந்து அணி தரப்பில் சொர்ணரின் டிப்போச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.