அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் சமயங்களில் ஆசிய கோப்பை தொடரும் ஒருநாள் ஃபார்மேட்டிலும், டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயங்களில் டி20 ஃபார்மேட்டிலும் இத்தொடரானது நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவரிசையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் வடிவிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் இதில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத காரணத்தால் இத்தொடரானது ஹைப்ரீட் மாடலில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சீசனுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கிட்டத்திட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த 1990-91ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடத்தப்பட்டது.
மேலும் எதிர்வரவுள்ள 2026ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2027ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஒருநாள் வடிவில் வங்கதேசத்தில் நடத்தப்படும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் அந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. அதனை முன்னிறுத்தி வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரும் ஒருநாள் வடிவில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இத்தொடர்களுக்கான போட்டி அட்டவணை, இடம், நாள் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.