ஐபிஎல் 2022: சாம்ஸை புகழ்ந்த ரோஹித் சர்மா!
ஐபி.எல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2ஆவது வெற்றியை பெற்றது. அதிலும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. களத்தில் அதிரடி வீரர்களான டேவிட் மில்லர், திரிவேதியா இருந்தனர். டேனியல் சாம்ஸ் அந்த ஓவரை வீசினார். அவர் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பையை வெற்றிபெற வைத்தார்.
3ஆவது பந்தில் ராகுல் திவேத்தியா ரன் அவுட் ஆனார். சாம்ஸ் 3 பந்தில் ரன் எதுவும் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசினார். மில்லரால் அவரது பந்தை அடிக்க இயலவில்லை.
கடந்த 6ஆம் தேதி டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன் கொடுத்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் வெறும் 3 ரன்களே கொடுத்து குஜராத் வெற்றியை தடுத்தார்.
இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த வெற்றி எப்போதுமே திருப்தியை அளிக்கும். எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்களை எடுத்தது அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது. அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது.
பந்து வீச்சாளர்களின் பணி பாராட்டும் வகையில் இருந்தது. டேனியல் சாம்ஸ் கடந்த போட்டிகள் மூலம் மிகுந்த அழுத்தத்தில் வீசினார். அவரிடம் உள்ள தரம் எனக்கு தெரியும். கடைசி ஓவரை அவர் புத்திசாலித்தனமாக வீசினார்” என்று தெரிவித்தார்.