ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 61 ரன்களையும், ராஜத் பட்டிதார் 50 ரன்களையும் சேர்க்க, இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் ஒடுத்து அசத்தினர். இதில் இஷான் கிஷான் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்களில் இஷான் கிஷான் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தனது கம்பேக் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 17 பந்துகளில் அரைசதம் கடந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.  இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் விருது பெற்றபின் பேசிய பும்ரா, “இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் எப்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என நினைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் பிட்ச்சில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. நான் அதை நன்கு கவனித்து அதற்கேற்றாற் போல எனது பந்துவீச்சை மாற்றிக்கொண்டேன். அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி. சில சமயம் எல்லாமே நமக்கு சாதகமாக அமையும். இது எனக்கு அப்படி ஒரு நாளாக அமைந்தது.  இந்த ஃபார்மெட் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு சோதனையை கொடுக்கும் கடினமான ஃபார்மெட். 

ஆனால் நான் இதுபோன்ற போட்டிகளுக்காகவே என்னை தயார்படுத்தி வருகிறேன்.  இன்றைய ஆட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். என்னிடம் நிறைய விதமான பந்துகளை வீசுவதற்கான ஆப்சன் இருந்தது.  கையில் ஒரே ஒரு வித்தையை வைத்திருப்பவனாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அனதவகையில் இப்போட்டியில் நான் வெறுமென யார்க்கர் பந்து மட்டுமே வீச வேண்டும் என நினைக்கவில்லை.  ஒரு சில நாள்களில் என்னுடைய யார்க்கர்களை சரியாக வீச முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட நாள்களில் நான் மற்ற விதமான பந்துகளையே சார்ந்திருக்க விரும்புகிறேன்.

எல்லாருமே புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு பயங்கரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நம்மை எதிர்கொள்ளும் வழியை கண்டடைந்து விடுகிறார்கள். அதனாலயே நான் அதிகமான வேரியேஷன்களை வைத்திருக்க விரும்புகிறேன். பந்துவீசுவது கடினமான காரியம்தான். சில சமயம் நீங்கள் பயங்கரமாக அடி வாங்குவீர்கள். சில நாள்கள் உங்களுக்குப் பயங்கர மோசமாக இருக்கும். ஆனால், நாம் அதிலிருந்தெல்லாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நான் எப்போதெல்லாம் மோசமான நாள்களை எதிர்கொள்கிறேனோ அப்போதெல்லாம் அந்த மோசமான நாளின் என்னுடைய செயல்பாட்டை கவனிப்பேன். 

Advertisement

அதன்மூலன் நான் எங்கு தவறு செய்தேன், எதனால் என்னால் சரியாக வீச முடியவில்லை என்பதை அறிந்துகொள்ள முயல்வேன். அதற்காக வலைப்பயிற்சியில் கடினமாக உழைக்க வேண்டும். சிக்ஸர்களாக அடிக்கும் பேட்டர்களுக்கு நிறைய பந்துவீசி நம்மை நாமே அழுத்தத்திற்குள் தள்ளிக்கொள்ள வேண்டும். அப்போது உங்களுக்கான பதில்கள் கிடைக்கும். உங்களால் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீச முடிந்தாலும், தேவைக்கேற்ப மெதுவான பந்துகளை வீச வேண்டும் என்ற நிலையில் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இந்த ஃபார்மெட்டில் அனைத்து விஷயங்களும் முக்கியமானவை” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News