IRE vs PAK, 3rd T20I: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்!

Updated: Tue, May 14 2024 23:05 IST
IRE vs PAK, 3rd T20I: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்! (Image Source: Google)

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி - ரோஸ் அதிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஸ் அதிர் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் லோர்கன் டக்கர் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருடன் பால்பிர்னியும் ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஆண்ட்ரூ பால்பிர்னி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய லோர்கன் டக்கர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஹாரி டெக்டரும் அதிரடியாக விளையாடினார். இதில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்கள் எடுத்த நிலையில் லோர்கன் டக்கர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நெய்ல் ராக் 4, ஜார்ஜ் டக்ரெல் 6, கர்டிஸ் காம்பெர், மார்க் அதிர் ஆகியோர் தலா ஒரு ரன் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி டெக்டர் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

இதில் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து அபாரமாக விளையாடிய கேப்டன் பாபர் ஆசாம் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 75 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய இஃப்திகார் அஹ்மதும் 5 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசாம் கான் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை