அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
பின் போட்டி 38 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய பிரெண்டன் டெய்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நட்சத்திர வீரர் சகாப்வாவும் 5 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரேக் எர்வின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினாலும், மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் அரைசதம் கடந்த எர்வின் 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 34 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.