இந்திய அணிக்கு எதிராக நான் இப்படி விளையாட காரணம் இதுதான் - மிட்செல் மார்ஷ்!

Updated: Thu, Mar 23 2023 12:24 IST
It is just natural aggression when I am batting: Mitchell Marsh! (Image Source: Google)

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றிக்கு ஒருநாள் தொடரில் பழி தீர்த்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மிட்சல் மார்ஷ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் 81 ரன்கள் குவித்த மார்ஷ் இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றியை அழைத்துச் சென்றார்.

அதோடு நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கி 47 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 47 ரன்கள் குவித்து அந்த அணியின் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார். இப்படி இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அரைசதமும், மூன்றாவது ஆட்டத்தில் 47 ரன்களும் குவித்த மிட்சல் மார்ஷ் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை பெற்றார்.

அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக நேற்றைய மூன்றாவது போட்டியில் முதல் முறையாக இந்த தொடரின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்த டேவிட் வார்னர் கூட தனது துவக்க வீரருக்கான இடத்தை மிட்சல் மார்ஷிடம் விட்டுவிட்டு நான்காவது வீரராக களமிறங்கி இருந்தார். 

இந்நிலையில் இந்த தொடரில் தனது அதிரடியான ஆட்டம் குறித்து பேசியிருந்த தொடர் நாயகன் மிட்சல் மார்ஷ், “நான் பேட்டிங் செய்ய வரும் பொழுது என்னுடைய இயற்கையான அதிரடியை வெளிக்காட்ட முயற்சித்தேன். அந்த வகையில் என்னுடைய இயல்பான அதிரடி ஆட்டம் தான் இந்திய அணிக்கு எதிராக நான் இப்படி விளையாட காரணம். அதுமட்டும் இன்றி துவக்க வீரராக களம் இறங்கும்போது என்னால் மிகவும் சுதந்திரமாக விளையாட முடிகிறது. இயற்கையாகவே என்னுடைய ஆட்டம் அதிரடியானது என்பதினால் அந்த இயல்பு எனக்கு பேட்டிங்கின் போது பெரிய அளவில் உதவியது.

நான் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி சிறப்பாக விளையாடியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நான் நிறைய விடயங்களில் பயிற்சியை மேற்கொண்டேன். தற்போது இந்திய அணிக்கு எதிரான இந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். நிச்சயம் இந்த ஃபார்மை நான் அப்படியே ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக தொடருவேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை