நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!

Updated: Thu, Aug 22 2024 20:16 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

இந்நிலையில், சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது நேற்று வழங்கப்பட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆடவருக்கான சர்வதேச கிரிக்கெட்டருக்கான விருது வழங்கப்பட்டது. மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோருக்கும் சியட் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய ரோஹித் சர்மா, முடிவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் அணியில் மாற்றங்களைச் செய்வது எனது கனவாக இருந்ததாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தக் குழுவை மாற்றுவதும், புள்ளிவிவரங்கள் மற்றும் முடிவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், மக்கள் அதிகம் யோசிக்காமல் வெளியே சென்று சுதந்திரமாக விளையாடக்கூடிய சூழலை உருவாக்குவதை உறுதிசெய்வது எனது கனவாக இருந்தது. எனது மூன்று தூண்களான ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது.

எனக்கு என்ன வேண்டுமென்பதில் இவர்கள் உதவி மிகவும் முக்கியமாக இருந்தது. நிச்சயமாக வீரர்களையும் நான் மறக்கக் கூடாது. முக்கியமான நேரத்தில் அவர்களது சிறப்பான செயல்பாடுகளால்தான் வெற்றியை அடைய முடிந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றதன் மகிழ்ச்சி குறித்து வார்த்தைகளால் விளக்க முடியாது. அது எல்லா நாளும் கிடைக்ககூடிய மகிழ்ச்சி கிடையாது. நாங்கள் அதிகம் நம்பிக்கொண்டிருந்தது இந்த வெற்றியைத்தான்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை, ஏனென்றால் நீங்கள் வெற்றி பெறும் கேம்களையும் கோப்பைகளையும் ருசித்துவிட்டால், நீங்கள் அதனை நிறுத்த விரும்பமாட்டீர்கள். இன்னும் பல கோப்பைகளை வாங்க அணியாக தயாராகவிருக்கிறோம். எதிர்காலத்திலும் நாங்கள் இன்னும் பல கோப்பையை வெல்ல பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை