வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!

Updated: Thu, Aug 15 2024 20:20 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த தொடருக்காகவே தன்னை தயார்படுத்திக்கொள்ள பும்ராவிற்கு இந்த ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. மேற்கொண்டு பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக இந்த வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் டி20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் தன்னை நிரூபித்த அர்ஷ்தீப், டெஸ்ட் அறிமுகத்திற்கான அங்கீகாரத்தை இத்தொடரில் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிடப்படாத பிசிசிஐ வட்டாரம் கூறுகையில், "பும்ராவின் விஷயத்தில், அவர் தனது உடற்தகுதி குறித்து நன்கு அறிவார், மேலும் அவர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் விளையாட விரும்புகிறாரா இல்லையா என்பது அவரைப் பொறுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு 120 சதவீதம் உடற்தகுதியுடன் ஜஸ்பிரித் பும்ரா தேவை என்று அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் தெளிவாக உள்ளனர்.

அதற்கு முன், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இதனால் இத்தொடர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமான சோதனைகள் இருக்கலாம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அணி தேர்வாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

பும்ரா இல்லாத பட்சத்தில், அர்ஷ்தீப் சிங்கை டெஸ்ட் வடிவத்தில் முயற்சி செய்ய இந்திய அணிக்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும். இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இடது கை வேகப்பந்து வீச்சாளரை சிவப்பு பந்து வடிவத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இதன் விளைவாகவேக அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினார் என்று கூறப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது கலீல் அகமத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை