ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!

Updated: Sat, May 15 2021 16:41 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் பதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கையில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஆர்ச்சர், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சசெக்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடத் தொடங்கியுள்ளார். 

இந்த நிலையில், சசெக்ஸ் கிரிக்கெட் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தால் எப்படியும் சீக்கிரம் வீடு வந்திருக்கலாம். மீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று நம்புகிறேன். காயம் ஏற்பட்டவுடன் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்பது நான் எடுத்த கடினமான முடிவு. நான் நிச்சயம் இந்தியா சென்றிருக்க முடியும். அப்படி சென்றிருந்தால், என்னால் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் மீண்டும் தொடங்கினால் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இவரது இந்த அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ளார். கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "அடுத்தடுத்த போட்டி அட்டவணைப்படி எங்களுக்கு நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் இங்கிலாந்து வீரர்களை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது. அதேநேரம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் , சாம் கர்ரன், மொயீன் அலி , கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் , கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன், இயான் மோர்கன் , ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை