விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!

Updated: Thu, Jun 08 2023 16:47 IST
Justin Langer slams BCCI, says Virat Kohli was treated unfairly! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகப்பட்சமாக ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களையும் சேர்த்தனர். 

இந்நிலையில், நேற்று போட்டியின்போது வர்ணனை செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “களத்தில் விளையாடும்போது விராட் கோலி காட்டும் ஆக்ரோஷம் பிடித்திருந்தது. பிசிசிஐ அவருக்கு அநீதி இழைத்துள்ளது, வேறு எதையும் கேட்க விரும்பவில்லை. ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், மரியாதை நிமித்தமாக அவரை தொடர அனுமதிக்க வேண்டும். விராட் கோலியிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அவரது ஆக்ரோஷம், அவரது ஆர்வம், அவரது பேட்டிங் எல்லாமே பிடிக்கும். அவர் ஒரு அற்புதமான கேப்டன்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தோனிக்குப் பிறகு 3 வடிவ போட்டிகளுக்கும் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியுடன், 20 ஓவர் வடிவ போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். அப்போதே, பிசிசிஐ மற்றும் விராட் கோலிக்கு இடையில் கருத்து மாறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதம், ஒருநாள் வடிவ போட்டிகளின் கேப்டன்ஷியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். 50 ஓவர் வடிவ போட்டிகளின் கேப்டன்சி பதவியில் நீடிக்க விராட் கோலி விரும்பியபோதும், சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு அவரை நீக்கியது.

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகி 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஜஸ்டின் லாங்கர் நேற்று அவரை புகழ்ந்து பேசியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது விராட் கோலி, தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பிய நிலையில், கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்தான் ஜஸ்டின் லாங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை