ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!

Updated: Tue, Jan 18 2022 16:15 IST
KL Rahul, Marcus Stoinis, Ravi Bishnoi Set To Join New Lucknow Franchise For IPL 2022 (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம், மெகா ஏலமாக நடைபெறுகிறது.

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. 

அதன்படி ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகிய வீரர்களை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது. பாண்டியா, ரஷித் கான் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 15 கோடி சம்பளமும் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 7 கோடி சம்பளமும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா), இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

இதில் கே.எல். ராகுலுக்கு ரூ. 15 கோடியும் ஸ்டாய்னிஸுக்கு ரூ. 11 கோடியும் பிஸ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளார். 

ஐபிஎல் அணிகள் பல பிரபலங்களைத் தக்கவைக்காத நிலையில் ஸ்டாய்னிஸ், பிஸ்னாயின் தேர்வு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இருவரும் திறமையான வீரர்கள் தாம் என்றாலும் அவர்களை விடவும் ஐபிஎல் போட்டியில் சாதித்த பலரைத் தவிர்த்துவிட்டு இவ்விருவரையும் தேர்வு செய்துள்ளார்கள். 

மேலும் பஞ்சாப் அணிக்கு இருமுறை கேஎல் ராகுல் தலைமை தாங்கியும் அந்த அணி இருமுறையும் 6ஆம் இடமே பிடித்தது. இதனால் ராகுலை புதிய அணிக்கு கேப்டனாக்கியிருப்பதும் துணிச்சலான முடிவாகக் காணப்படுகிறது. ஒரு பேட்டராகக் கடந்த நான்கு வருடங்களிலும் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்து ராகுல் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை