ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய ஏ அணி!
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 420 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களையும், டாட் மர்பி 76 ரன்களையும், நாதன் மெக்ஸ்வினீ 74 ரன்களையும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதில் ஷாய் சுதர்ஷன் 75 ரன்களையும், ஜெகதீசன் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இந்திய ஏனி 194 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் தோர்ன்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாதன் மெக்ஸ்வீனி 85 ரன்களையும், ஜோஷ் பிலிப் 50 ரன்களையும் எடுத்ததை தவிர மற்ற வீரர்கள் பெரிய ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 185 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய வீரர்கள் குர்னூர் பிரார், மனவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணிக்கு 412 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில், தொடக்க வீரர் ஜெகதீசன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கேஎல் ராகுல் - சாய் சுதர்ஷன் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களது சதமடித்ததுடன் அணியின் வெற்றிக்கும் வித்திட்டனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் சாய் சுதர்ஷன் 100 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்களில் துருவ் ஜுரெல் 50 ரன்களைச் சேர்த்தது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 176 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.