புற்றுநோய் காரணமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட். இவர் கடந்த 1974ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒருநாள் போட்டிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு பரோடா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 206 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
அவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதன் காரணமாக சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த 2018ஆம் ஆண்டு பிசிசிஐ வழங்கி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அன்ஷுமான் கெய்க்வாட், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக அன்ஷுமான் கெய்க்வாட்டின் மருத்துவ செலவிற்காக பிசிசிஐ தரப்பில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கெய்க்வாட் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பிசிசிஐ, ஐசிசி உள்ளிட்டோர் தரப்பில் இருந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “ஸ்ரீ அன்ஷுமான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என்னுடை இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், "திரு. அன்ஷுமான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த கிரிக்கெட் தோழமைக்கும் இது இதயத்தை உடைக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.