எல்எல்சி 2024: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் கிரேட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வேன் வைக்கும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயில் - முகமது கைஃப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 5 பவுண்டரிகளுடன் 21 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மனன் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த யாஷ்பால் சிங் தனது பங்கிற்கு 20 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது கைஃப் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தெபா தாஸ் 20 ரன்களையும், பிரசன்னா 6 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் கிரேட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது. இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் நமன் ஓஜா 2 ரன்களுக்கும், டிவைன் ஸ்மித் 8 ரன்களுக்கும் என விக்கெட்ட்களை இழக்க, அடுத்து களமிறங்கிய இக்பால் அப்துல்லா ரன்கள் ஏதுமின்றியும், காலின் டி கிராண்ட்ஹோம் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் இயன் பெல் மற்றும் பென் டங்க் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் பென் டங்க் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பரத் சிப்லியும் தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்த்து பெவிலியனூக்கு நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் இயன் பெல் 41 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஆஷ்லே நர்ஸ் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் கிரேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துள்ளது. அதேசமயம் குஜராத் கிரேட்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.