இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. 

Advertisement

சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் ஆவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸிலும் சேர்த்து 91 ரன்களையும், விராட் கோலி 6 இன்னிங்சில் 93 ரன்களையும் மட்டுமே எடுத்து சோபிக்க தவறியதன் காரணமாகவே இந்திய அணி இந்த படுதோல்வியை சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியும் என்ற சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு மிகவும் முக்கியமான தொடராகும்.

அதிலும் குறிப்பாக கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இது மிக மிக முக்கிய தொடராகும். ஒருவேளை இந்த தொடரிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் அவரது கேப்டன் பதவியும் பறிக்கப்படும் என்பதும் உறுதி. அப்படி அவரது கேப்டன் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் தற்போதே எழத்தொடாங்கியுள்ளது. அந்தவகையில் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு அதிகபடியான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கபட வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இப்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பந்திற்கு உள்ளது. அவர் அதற்கு தகுதியானவர். அவர் எப்போது விளையாடினாலும் இந்திய அணியை முன் வைத்து விளையாடுகிறார்.

எந்த வரிசையில் பேட்டிங் இறங்கினாலும் போட்டியை வென்று கொடுக்கும் ஆட்டத்தை ஆடுவதற்கு தயாராக இருக்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா என எந்த நாடாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ரன்களை குவிக்கிறார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமோ, அல்லது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமோ எல்லாவற்றிலும் அவரால் ரன்களைச் சேர்க்க முடிகிறது. அவர் ஒரு முழுமையான பேட்டராக உள்ளார். 

Advertisement

ரிஷப் பந்த் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது நிச்சயம் அவர் ஒரு ஜாம்பவானாக ஓய்வு பெறுவார். அதற்குரிய ஆட்டத்தை அவர் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது விக்கெட் கீப்பிங் திறமையும் வெகுவாக முன்னேறி இருக்கிறது. அவர் களத்தில் இருக்கும் வரை நியூசிலாந்து அணியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்போது இருக்கும் அணியில் எதிர்கால இந்திய அணி கேப்டன் யார் என்று பார்த்தால் அது நிச்சயம் ரிஷப் பந்த் தான்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News