எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!

Updated: Thu, Dec 14 2023 14:25 IST
எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி! (Image Source: Google)

சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. இது இந்திய ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத சோகமாக அமைந்தது. ஏனெனில் ஆரம்ப முதலே லீக் சுற்றில் அட்டகாசமாக விளையாடிய இந்தியா தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து வரலாற்றை மாற்றி எழுதியது.

மேலும் ரோஹித் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்து பாண்டியா காயமடைந்ததால் திடீரென வாய்ப்பு பெற்ற ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அற்புதமான வாய்ப்பை நழுவ விட்டது.

இந்நிலையில் ஒன்றரை மாதங்கள் அபாரமாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப்போட்டி முடிந்த இரவில் இந்திய வீரர்கள் யாருமே சாப்பிட மனமில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருந்ததாக முகமது ஷமி கூறியுள்ளார். ஆனால் அப்போது திடீரென இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்து தங்களுக்கு ஆறுதல் தெரிவித்தது சோகத்திலிருந்து கொஞ்சம் வெளி வருவதற்கு உதவியதாக கூறியுள்ளார். 

இதுபற்றி பேசிய அவர், “நாங்கள் தோல்வியால் மனமுடைந்து பெவிலியினில் உட்கார்ந்திருந்தோம். குறிப்பாக 2 மாதங்களாக வெளிப்படுத்திய கடின உழைப்பு ஒரு மோசமான தோல்வியால் வீணானதை நினைத்து நாங்கள் சோகத்தில் ஆழ்ந்தோம். அது எங்களுடைய மோசமான நாள். அன்றைய நாளில் நாங்கள் ஏமாற்றத்துடன் இருந்தோம். ஆனால் அங்கே பிரதமர் வந்தது அனைவருடைய தலைகளையும் நிமிர வைத்தது.

சொல்லப்போனால் மோடி அவர்கள் எங்களை சந்திக்க வருவார் என்று யாருமே எங்களிடம் சொல்லவில்லை. திடீரென அவர் எங்களை பார்க்க வந்தார். அதற்கு முன்பு வரை நாங்கள் இரவு சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட மனநிலை இல்லாமல் சோகத்தில் அமர்ந்திருந்தோம். இருப்பினும் அவர் வந்தது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. 

பின்னர் அவர் எங்கள் அனைவரையும் அழைத்து ஆறுதலாக பேசினார். அதன் பின்பு தான் இந்திய அணியில் இருந்த வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பேசிக் கொள்ளத் துவங்கினர். குறிப்பாக இந்த தோல்வியிலிருந்து நாம் நகர வேண்டும் என்று பேசினோம். அந்த வகையில் பிரதமர் மோடி எங்களுடைய அறைக்கு வந்தது உதவியாக இருந்தது” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை