இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - மாண்டி பனேசர் கணிப்பு
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் அவரது இடத்தை நிரப்பக்கூடிய வீரராக சாய் சுதர்ஷன் இந்த தொடரில் பார்க்கப்படுகிறார். ஏனெனில் நடந்து முடிந்த ஐபில் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக் விளைடியா சாய் 759 ரன்களைக் குவித்து, இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றுள்ளார். மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளிலும் அவர் தனது ரன் வேட்டையை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலியாக சாய் சுதர்ஷன் இருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது இந்திய அணியில் சில நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும் பயமற்றவராகவும் தெரிகிறார். இங்கிலாந்து சூழ்நிலைகளிலும் சர்ரே அணிக்காகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
இதனால் நான்காம் இடத்தில் விராட் கோலியின் பாத்திரத்தை ஏற்று இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர் வருவார் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் ஒரு வீரரை நான் காண விரும்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம், இளம் இந்திய டெஸ்ட் வீரர்களும் அதே வழியில் விளையாடுவதை நான் காண விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
தற்சமயம் 23 வயதான சாய் சுதர்ஷன் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கால் பல சாதனைகளை நிகழ்த்தி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் 7 சதங்கள், 5 அரைசதங்களுடன் 1,957 ரன்களையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் விளையாடி 6 சதம், 6 அரைசதங்கள் என 1,396 ரன்களையும் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் 40 போட்டிகளில் மட்டுமே விளையடி 1,793 ரன்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.