ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!

Updated: Mon, Jan 15 2024 20:19 IST
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்! (Image Source: Google)

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தற்சமயத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறினார். அந்த சமயத்தில் மற்றொரு வீரர் ரோஹித் சர்மாவும் மிடில் ஆர்டரில் மட்டுமே வாய்ப்பு பெற்று சுமாராக செயல்பட்டு வந்தார்.

அப்போது அவர்களின் திறமையை கவனித்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறக்கி விட்டார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய இந்த ஜோடி அபாரமாக செயல்பட்டு 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல உதவியது. குறிப்பாக ஷிக்கர் தவான் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியாவின் வெற்றி பங்காற்றினார்.

அப்போதிலிருந்து 2019 உலகக் கோப்பை வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடியாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். மேலும் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (5,148) பார்ட்னர்ஷிப் அமைத்த 2ஆவது இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளார்கள்.

இருப்பினும் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து தவான் தொடரிலிருந்து வெளியேறினார். அதிலிருந்து மீண்டு வந்த பின் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறிய அவருக்கு கில், ஜெய்ஸ்வால் போன்ற ஏராளமான இளம் வீரர்கள் போட்டிக்கு வந்து விட்டனர். அதனால் 2023 உலகக் கோப்பையில் கழற்றி விட்டப்பட்ட அவரின் இந்திய கேரியரும் முடிந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தாம் இந்தியாவுக்காக அசத்துவதற்கு ரோஹித் சர்மாவும் முக்கிய பங்காற்றி உதவியதாக தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டாப் ஆர்டரில் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுப்பதற்கு ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக அது பெரிய ஸ்கோர் அடிப்பதற்கும் இலக்கை துரத்துவதற்கும் நல்ல அடித்தளத்தை கொடுத்தது. அந்த வகையில் என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன்.

ஏனெனில் எதிர்ப்புறம் ரோஹித் சர்மா எனக்கு சௌகரியத்தையும் உறுதியையும் கொடுப்பார். 2019இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்த 4ஆவது ஒருநாள் போட்டியில் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களின் சிறந்த இன்னிங்ஸ். அதற்கு அடுத்தபடியாக 2018 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் முதல் விக்கெட்டுக்கு நாங்கள் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததாகும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை