இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.
மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பார்ல் ராயல்ஸ் அணியும் 2025ஆம் ஆண்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த அணியானது வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை பார்ல் ராயல்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர்கள் ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாம் ஹைன் ஆகியோரையும் பார்ல் ராயல்ஸ் அணியானது இன்றைய தினம் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் இதுவரை 38 போட்டிகளில் விளையாடி 676 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் அவரது ஸ்டிரைக் ரெட்டானது 140 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தனது இங்கிலாந்து ஒருநாள் அணிக்காக அறிமுகமான சாம் ஹைன், இதுவரை இரண்டு சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேசமயம் வார்விக்ஷயர் அணிக்காக அனைத்து வடிவங்களிலும் சிறந்த செயல்திறன் கொண்டவர்களில் ஒருவராக இருந்து வரும் ஹைன், 155 டி20 போட்டிகளில் 133.95 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,539 ரன்களை குவித்துள்ளார். இதில்க் ஒரு சதம் மற்றும் 34 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.