பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 7 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் 3ஆம் வரிசையில் இறங்கிய ஷான் மசூத் 3 ரன்களுக்கும், சௌஷ் ஷகீல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து கேப்டன் பாபர் ஆசாம் - சர்ஃப்ராஸ் அஹமது இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு பெற்ற சர்ஃபராஸ் அகமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி. அரைசதம் அடித்தார். பாபர் அசாம் - சர்ஃபராஸ் அகமது ஆகிய இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 194 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் குவித்தனர்.
மறுபக்கம் கேப்டன் பாபர் ஆசாம் சதம் விளாச, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் அஹ்மத் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 161 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நௌமன் அலி, முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகா சல்மான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதனால் 2ஆம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்களை எடுத்துள்ளது.
இதில் அகா சல்மான் 54 ரன்களிலுடனும், மிர் ஹம்சா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.