ஐபிஎல் 2021: சிக்சர் மழை பொழிந்த ஹூடா, அதிரடியில் மிரட்டிய ராகுல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

Updated: Mon, Apr 12 2021 21:37 IST
PL2021 : KL, Hooda on fire knock, RR need 222 runs to win (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச முடிவுசெய்தார்.

இதையடுத்து பஞ்சாப் அணியின்  தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இணை களமிறங்கினர். இதில் அகர்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்லும் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு 40 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசியதுடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 28 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களை குவித்திருந்த தீபக் ஹூடா, கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் ஆட்டத்தின் இறுதிவரை விளையாடி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் திவேத்தியாவின் அபார கேட்சின் மூலம் ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.

பஞ்சாப் அணி தரப்பில் கே.எல்.ராகுல் 91 ரன்களையும், தீபக் ஹூடா 64 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சேட்டன் சகரியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை