துலீப் கோப்பை 2024: இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி!

Updated: Sun, Sep 22 2024 22:02 IST
Image Source: Google

நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸை  இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தாலும், ஷஷ்வத் ராவத்தின் சதத்தாலும், ஆவேஷ் கானின் அரைசதத்தின் மூலமும் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களைச் சேர்த்தது. இதில் ஷஷ்வத் ராவத் 124 ரன்களையும், ஆவேஷ் கான் 51 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இந்தியா சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஜயகுமார் வைஷாக் 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளையும், கௌரவ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் அபிஷேக் போரல் 82 ரன்களையும், புல்கிட் நாரங் 41 ரன்களையும், பாபா இந்திரஜித் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா சி அணியானது முதல் இன்னிங்ஸில் 234 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா ஏ அணி தரப்பில் ஆவேஷ் கான், ஆகிப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 63 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஏ அணியைச் சேர்ந்த ரியான் பராக் 73 ரன்களையும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்களையும், குஷாக்ரா 42 ரன்களைச் சேர்க்க 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்தது.  இதன்மூலம் இந்தியா சி அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து கடின இலக்கை துரத்திய இந்தியா சி அணியில் சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தினார். அதன்பின் 111 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மேலும் அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 44 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் இந்தியா சி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 217 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்தியா ஏ அணியானது 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை