என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்!

Updated: Thu, Sep 21 2023 19:49 IST
என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் இரண்டு போட்டிகளை தவிர்த்து மூன்றாவது போட்டியில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக விளையாடுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை உலகில் நம்பர் 1 வீரராக மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

இருப்பினும் அவர் மீது உள்ள நம்பிக்கை காரணமாக அவரை இந்திய அணி உலக கோப்பை தொடருக்கான அணியிலும் தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி வெறும் 24 ரன்கள் சராசரியுடன் 537 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்க்கு அவர் செட்டாக மாட்டார் என்று பலரும் கூறி வரும் வேளையில் அவர் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அவருடைய திறமை காரணமாகவே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்திய அணி நிச்சயம் அவரை ஆதரித்து அவருக்கான வாய்ப்புகளை வழங்கும் என டிராவிட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சூரியகுமார் யாதவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். நிச்சயம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்துவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் நிச்சயம் அவர் விளையாடுவார்” என்று ஆதரவாக பேசியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை