ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!

Updated: Sat, Aug 10 2024 20:42 IST
Image Source: Google

ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசன் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் ச்தோனியை எதிர்வரும் சீசனில் அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏனெனில் ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன்களில், ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து 5 ஆண்டுகளை கடக்கும் பட்சத்தில் அவரை வாங்கும் ஐபிஎல் அணிகள் அன்கேப்ட் வீரராக தங்கள் அணியில் இணைத்துக்கொள்ளும் விதிமுறையானது இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த விதியை பிசிசிஐ மாற்றியமைத்திருந்தது. இந்நிலையில் தான் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கான கூட்டத்தில் இந்த விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது. 

இருப்பினும் இது குறித்து பிசிசிஐ தரப்பில் எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்ல. இதனால் சிஎஸ்கே அணியின் இந்த கோரிக்கையானது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதனை காலம் தான் பதில் சொல்லும். இந்நிலையில், தற்போது இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து சில ஆண்டுகள் ஆவதால், அவர் அன்கேப்ட் வீரராக விளையாட முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “மகேந்திர சிங் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? இது ஒரு பெரிய கேள்விக்குறி. அது சரிதான். அவர் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவரை தற்போது அன்கேப்ட் வீரராக தான் பார்க்கவேண்டும். ஆனால் தோனி போன்ற ஒரு வீரர், அன்கேப்ட் வீரராக விளையாட முடியுமா? இது மற்றொரு விவாதத்திற்கான தலைப்பாக உருவாகும். ஏனெனில் தோனியைப் பற்றி ஏதேனும் செய்திகள் வந்தால் நிச்சயம் அதனை அனைவரும் விவாதிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தற்போது 43 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும், 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக அவர் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். அப்போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய அவர், தற்போதுவரை ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை