இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கின்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின் அபுதாபி சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒருசில தினங்களுக்கு முன் இந்தியா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

இந்நிலையில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களைக் கட்டிலும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் அறிமுகமில்லாத ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் இணைந்து இரண்டு போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களைக் காட்டிலும்  இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு இங்கிலாந்து அணியில் நிலவிய சூழலும், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான வழிநடத்துதலுமே காரணம் என ரெஹான் அஹ்மத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “ இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியின் அனுபவமற்ற இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது எந்த அளவுக்கு அணியின் சூழல் சிறப்பாக  உள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதனை டாம் ஹார்ட்லி மற்றும் சோயிப் பஷீர் ஆகியோர் இத்தொடரில் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் விளையாடியதைக் கொண்டே நாம் சொல்லலாம். அதேபோல அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். எங்கள் அணியில் உள்ள தலைமை மற்றும் அணியின் சூழலில் விளையாடும்போது எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை மறக்கச்செய்து நாங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. 

ஆட்டம் எவ்வளவு மோசமாக சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து எப்படி சிறப்பான விஷயத்தைக் கொண்டுவர முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம்  இருவருமே கூறுவர். நான் 4 மோசமான பந்துகளை வீசிவிட்டு ஒரு விக்கெட் எடுப்பது, தொடர்ச்சியாக ரன்களே கொடுக்காமல் 16 பந்துகள் வீசுவதைக் காட்டிலும் சிறந்தது.

Advertisement

மேலும், நாங்கள் அபுதாபியில் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் நானும், பஷீரும் தொழுகைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் வெள்ளிக்கிழமை பயிற்சியில் எங்களால் விளையாட முடியாது என்று தோன்றியது. நான் அணியின் மேலாளர் வெய்ன் பென்ட்லியிடம் நாங்கள் தொழுகைக்குச் செல்ல் வேண்டி இருப்பதால் வெள்ளிக்கிழமை பயிற்சியிலிருந்து நாங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டு மெசேஜ் அனுப்பினேன்.

அப்போது பென் ஸ்டோக்ஸ் நேரடியாக என்னை தொடர்ப்பு கொண்டு ‘இதுபோன்ற விஷயங்களைப் பற்றி எப்போது வேண்டுமானலும் நீங்கள் எனக்கு தகவல் தெரிவிக்கலாம். நான் அதனை முழுமையாக புரிந்துகொள்கிறேன்’ என்று கூறினார். மேலும் அவர் தனது வார்த்தைகளில் உறுதியாக இருந்ததுடன், நாங்கள் ஒவ்வொரு முறையும் தொழுகைக்குச் செல்லும் போது ஸ்டோக்ஸ் எங்களை புரிந்துகொண்டதுடன், எங்களுக்கான மரியாதையையும் கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News