இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இதனால் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவின் மீதான எதிர்பார்ப்புகளையும் அவர் பூர்த்தி செய்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமைத் திறன்களைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்டு பேசிய அவர், “ரோஹித் சர்மா போட்டியின் போது டாஸில் பேட் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்வதிலும், அணி பேருந்தில் அவரது தொலைபேசி மற்றும் ஐபேட் உள்ளிட்டவற்றை மறந்தாலும், அவர் தனது விளையாட்டை ஒருபோதும் மறக்க மாட்டார்.
அவர் அதில் மிகவும் திறமையானவர் மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். அவர் ஒரு கேப்டனாக திட்டங்களை வகுப்பதில் மிகவும் சிறந்தவர். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பும்ராவின் ஓவரை சீக்கிரமே முடித்தார். அந்த முடிவை நிறைய பேர் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும், ஆனால் அந்த முடிவு எங்களை கடைசி ஓவரில் 16 ரன்களில் எதிரணியை கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளியது.
களத்தில் அவர் எடுக்கும் சில முடிவுகள், வெளியில் அமர்ந்திருக்கும் ஒரு பயிற்சியாளராக உங்களை ஆச்சரியப்படுத்தும். ஏனெனில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கும் விசயங்களை அவர் களத்தில் செய்துகொண்டிருப்பார். ஒரு பேட்ஸ்மேனாக, அவர் ஒரு அற்புதமான வீரர் என்பது அவரது முதல் தரம். அவர் தனது ஆட்டத்தை நன்றாக புரிந்து கொண்டவர் என்று நினைக்கிறேன்.
அவர் எப்போதும் தெளிவான விளையாட்டுத் திட்டத்தை வைத்திருப்பார். ஒரு தலைவராக இருந்தாலும், நீங்கள் முன்னணியில் இருந்து வழிநடத்த வேண்டும். முன்னுதாரணமாக நீங்கள் செயல்பட வேண்டும். மேலும் அவர் கேப்டனாக ஆனதால் அவர் எப்போதும் முன்மாதிரியாக இருந்து வருகிறார். அவர் சக வீரர்களுக்கான கேப்டன். மேலும் அவர் வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், அவர்களை முழுமையாக நம்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.