பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!

Updated: Fri, Dec 29 2023 14:04 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 2வது இன்னிங்ஸில் அதை விட மோசமாக 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

அத்துடன் பும்ரா, சிராஜ் ஆகியோரை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்ததும் ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் கனவாக போயுள்ளது.

முன்னதாக இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டியில் விளையாடாத இந்திய அணியினர் தங்களுக்குள்ளேயே குழுவாகப் பிரிந்து இன்ட்ரா ஸஃகுவாட் பயிற்சிகளை மட்டுமே செய்தனர். இந்நிலையில் சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் வெற்றி பெறுவதற்கு முன்கூட்டியே சென்று இந்திய அணியினர் ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடாததே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தோல்விக்கான வெளிப்படையான காரணம் என்னவெனில் நீங்கள் இங்கே எந்த போட்டியிலும் விளையாடவில்லை. நீங்கள் இங்கே வந்து நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது வேலைக்காகாது. ஆம் நீங்கள் இந்தியா ஏ அணியை அனுப்பினீர்கள். ஆனால் உங்களுடைய முதன்மை அணி இங்கே பயிற்சி போட்டியில் விளையாட வேண்டும். 

இன்ட்ரா ஸ்குவாட் போட்டி என்பது ஜோக்காகும். ஏனெனில் உங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் உங்களுடைய பேட்ஸ்மேனுக்கு எதிராக அச்சுறுத்தக் கூடிய பவுன்சர்களை வீசுவார்களா? நம்முடைய பவுலர்கள் நமது பேட்ஸ்மேன்கள் காயமடைந்து விடுவார்கள் என்று பவுன்சர்கள் வீச மாட்டார்கள். எனவே நீங்கள் ஆரம்பத்திலேயே பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும். 

இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள். ஏனெனில் சீனியர்கள் முதல் 2 போட்டிகளில் சொதப்பினாலும் கடைசி 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். ஒருவேளை சீனியர்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தான் விளையாடுவேன் என்று சொன்னால் இளம் வீரர்களை பயிற்சி போட்டியில் விளையாட வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை