தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாமும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெல் 6 ரன்களுக்கும், ஜோர்டன் ஹார்மன் 9 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் மார்கோ ஜான்சன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்திருந்த மார்கோ ஜான்சன் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய மார்க்ரம் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

அவருடன் இணைந்து விளையாடிய லியாம் டௌசனும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இறுதியில் லியாம் டௌசன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர் என 25 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News