இனி கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் விளையாட வேண்டும் - சஞ்சய் பங்கார்!

Updated: Mon, Jan 01 2024 20:53 IST
இனி கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் விளையாட வேண்டும் - சஞ்சய் பங்கார்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதையடுடதது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 03ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி சமன்செய்தாலோ தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும். அதேசமயம் தொடரை சமன்செய்யும் நோக்குடன் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் யோசனை வழங்கினார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கார், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் இனி கே எல் ராகுல் நடுவரிசையில் தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார். 

இது குறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் நடு வரிசையில் விளையாடுவதன் மூலம் அது இந்தியாவுக்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது. அவர் ரன்களை நகர்த்தும் வீரராக இருக்கிறார். இந்திய அணிக்காக அவர் பல இடங்களில் விளையாடி இருக்கிறார். தற்போது கீழ் வரிசை வீரர்கள் மற்றும் பவுலருடன் இணைந்து விளையாட கூடிய தகுதி கேஎல் ராகுலுக்கு மட்டும் தான் இருக்கிறது. 

கேஎல் ராகுலை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் நடு வரிசையில் தான் விளையாட வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய அணி இனி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே எல் ராகுல் நடு வரிசையில் ஆறாவது இடத்தில் தான் விளையாட வேண்டும். செஞ்சூரியன் மைதானத்தில் கேஎல் ராகுல் 2021 மற்றும் 2023 என இரண்டிலுமே சதம் அடித்திருக்கிறார். 

ஒரு இடத்தில் நாம் சிறப்பாக விளையாடிவிட்டால் அது தொடர்பாக நல்ல நினைவுகள் நம்முடன் இருக்கும். அதே மைதானத்திற்கு நாம் திரும்பி செல்லும் போது நமது நம்பிக்கை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார். விக்கெட் கீப்பர் ரிசப் பந்த், தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத நிலையில் கேஎல் ராகுல் தான் அந்த பணியை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை