தேர்வு குழுவின் முடிவு என ஆச்சரியமாக உள்ளது - ஷாஹித் அஃப்ரிடி!

Updated: Sun, Mar 31 2024 22:38 IST
தேர்வு குழுவின் முடிவு என ஆச்சரியமாக உள்ளது - ஷாஹித் அஃப்ரிடி! (Image Source: Google)

ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் அணியும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாஹின் அஃப்ரிடியை அப்பதவியிலிருந்து நீக்கி, பாபர் ஆசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் ஆசாம் விலகினார். இதனையடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூதும், டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடியும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தலைமையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 

இதனால் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்ட பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழுவினர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக பாபர் ஆசாமை இன்று நியமனம் செய்தது. இதையடுத்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தான் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டனாக பாபர் ஆசாம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தேர்வுக் குழுவில் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களின் முடிவு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கேப்டன்சியில் ஒரு மாற்றம் தேவை என்றால் அதற்கு முகமது ரிஸ்வான் சிறந்த தேர்வு என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் இப்போது முடிவு எடுக்கப்பட்டதால், பாகிஸ்தான் அணிக்கும், பாபர் அசாமிற்கும் எனது முழு ஆதரவை அளிக்கிறேன். மேலும் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவுசெய்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை