கீழ் வரிசை பேட்டிங், கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய வாய்ப்புகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, நாங்கள் கேட்சுகளை இழந்தோம், எங்கள் கீழ் வரிசை பேட்டர்கள் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை, ஆனால் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம், ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல முயற்சி. நேற்று நாங்கள் 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்வோம் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகள் 20-25 ரன்கள் மட்டுமே எடுத்தன.
இது ஒருபோதும் நல்ல அறிகுறி அல்ல. அதன்பின் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய பிறகும் எங்களுக்கு இப்போட்டியில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன். இறுதியில் எங்களால் அதனைச் செய்ய முடியவில்லை. இப்போட்டியில் எங்களுடைய பேட்டிங் சரிவு குறித்து நாங்கள் நிறைய ஆலோசிக்க வேண்டி உள்ளது. வரவிருக்கும் போட்டிகளில் நாம் சரிசெய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இந்த போட்டியில் நாங்கள் நிறைய கேட்சுகளை எடுக்க தவறிவிட்டோம். நிச்சயமாக வாய்ப்புகள் எளிதாக வராது, குறிப்பாக இது போன்ற விக்கெட்டுகளில், நாங்கள் நிறைய கேட்சுகளை இழந்தோம். தற்போது எங்களிடம் ஒரு இளம் அணி உள்ளது. அவர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டி குறித்து பேசினால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களிலும் ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களில் ஆல் அவுட்டாகி, எதிரணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 5ஆம் நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.