ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகினர்.
இந்நிலையில் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்தியாவின் ஷுப்மன் கில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் அண்டர் 19 அணியின் கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வாகினர்.
இதில் இங்கிலாந்து அணியின் கிரேஸ் ஸ்க்ரிவென்ஸ் ஜனவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக ஐசிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் 3 அரைசதங்கள் உள்பட 293 ரன்களைக் குவித்ததன் காரணமாக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.