SL vs IND, 1st T20I: பயத்தை காட்டிய இலங்கை பேட்டர்கள்; பந்துவீச்சில் அசத்தி வெற்றிபெற்ற இந்தியா!

Updated: Sat, Jul 27 2024 22:52 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இன்று தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட, மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் பவுண்டரிகளை விளாசினார். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வநிந்து ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் - ரிஷப் பந்த் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இதில் ரிஷப் பந்த் நிதானமாக விளையாட, மறுமுனையில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 22 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 9 ரன்களுக்கும், ரியான் பராக் 7 ரன்களையும்  மட்டுமே எடுத்து நிலையில் பதிரனா பந்துவீச்சில் அட்த்தடுத்து விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பந்தும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களை எடுத்திருந்த நிலையில் பதிரானா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா, வநிந்து ஹசரங்கா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலம் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 84 ரன்களையும் சேர்த்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் 

ஆனால் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினார். பின் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்த நிலையில் நிஷங்கா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசிய கையோடு குசால் பெரேரா 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா, அனுபவ வீரர் தசுன் ஷனகா ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸும் 12 ரன்களில் நடையைக் கட்டினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, இலங்கை அணியானது 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், ஆர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை