சயித் முஷ்டாக் அலி: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹிமாச்சல் பிரதேசம்!

Updated: Thu, Nov 03 2022 19:09 IST
Image Source: Google

இந்தியாவின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான சயித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஹிமாச்சல் அணியில் சோப்ரா 17, அன்குஷ் பைன்ஸ் 16, அபிமன்யூ ரானா 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த் சுமித் வெர்மா - ஆகாஷ் வாஸிஷ்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சுமிர் வெர்மா அரைசதம் கடக்க, மறுமுனையில் ஆகாஷ் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் பங்கஜ் ஜெய்ஸ்வால் 27 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹிமாச்சல் பிரதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் அபிஷேக் சர்மா, சன்விர் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஒருமுனையில் ஷுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க, மறுமுனையில் களமிறங்கிய அபிஷேக் சர்மா, பிரப்ஷிம்ரான் சிங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 45 ரன்களிலும், அன்மொல்ப்ரித் சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலின் திரும்பினர். அதன்பின் முயற்சித்த கேப்டன் மந்தீப் சிங் 29, ராமந்தீப் சிங் 29 என விக்கெட்டை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் ஹிமாச்சல் பிரதேச அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை