நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்தவகையில் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 4 ரன்னிலும், லாரன் டௌன் ஒரு ரன்னிலும், கேப்டன் சோஃபி டிவைன் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த ஜார்ஜ் பிளிம்மர் - புரூக் ஹாலிடே இணை சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா பிளிம்மர் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் ஹாலிடே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மேடி கிரீன் 15 ரன்களுக்கும், இஸபெல்லா கஸ் 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புரூக் ஹாலிடேவும் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 86 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் லியா தஹுஹு 24 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு வழக்கம் போல் ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷஃபாலி வர்மா 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் யஷ்திகா பாட்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் 35 ரன்களை எடுத்த நிலையில் யஷ்திகா பாட்டியா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மறுபக்கம் அபாரமாக விளையாடிய வந்த ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டிய நிலையில், 100 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் 59 ரன்களையும், ஜெமிமா ரோட்ஸிக்ஸ் 22 ரன்களையும் சேர்க்க இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது.