SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் ஆறுதல் வெற்றியையும் பதிவுசெய்தது.
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி இலக்கை நோக்கி விளையாடும் போது களநடுவர் நோபால் தர மறுத்தது சர்ச்சையானது. இதனால் இலங்கை அணி அப்போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக கோபமடைந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா போட்டி முடிவுக்கு பின் கள நடுவர் லிண்டன் ஹனிபல்லை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது ஐசிசி நெறிமுறை விதி 2.13 படி குற்றமாகும். அதாவது போட்டியின் போது வீரர்கள் அல்லது கள நடுவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள், போட்டி நடுவர் ஆகியோரை தரைகுறைவாக போசுவது அல்லது அவமதிப்பது குற்றமாகும். இதன் காரணமாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபாரதம் விதிப்பதுடன், 3 கரும்புள்ளிகளையும் ஐசிசி அபாராதமாக விதித்தது.
ஏற்கெனவே ஹசரங்கா இரண்டு கரும்புள்ளிகளை அபராதமாக பெற்றிருந்த நிலையில் இந்த மூன்று புள்ளிகளுடன் சேர்த்து மொத்தமாக 5 கரும்புள்ளிகள் அவருக்கு வழங்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கரும்புள்ளிகளை பெறும் பட்சத்தில் அவர் ஒரு டெஸ்ட் அல்லது, இரண்டு ஒருநாள், இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படுவார்.
அந்தவகையில் இலங்கை அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. தற்போது ஹசரங்கா 5 கரும்புள்ளிகளைப் பெற்றுள்ளதால், அவர் அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் வநிந்து ஹசரங்காவால் பங்கேற்க முடியாது.
அதேபோல், ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கும் ஐசிசி அபாராதம் விதித்துள்ளது. ஏனெனில் இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது நடுவரின் எச்சரியைக்கையும் மீறி நேரத்தை வீணக்கியதன் காரணமாக ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 சதவீதமும், மேலும் ஒரு கரும்புள்ளியையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.