ரிஷப் பந்த் ஒற்றை காலில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருந்தாலும் அவரை தேர்வு செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர்!

Updated: Wed, Jan 10 2024 21:52 IST
ரிஷப் பந்த் ஒற்றை காலில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருந்தாலும் அவரை தேர்வு செய்ய வேண்டும் - சுனில (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெறும் இந்த தொடர் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது. அதற்காக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி முடித்த இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன் அந்த இடத்தில் நிலையான வாய்ப்புகள் பெற்று விளையாடி வந்த ரிஷப் பந்த் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.

இருப்பினும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரை இத்தொடரில் தேர்வு செய்துள்ளது. ஆனாலும் இதுவரை பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டிராத அவர்கள் இன்னும் தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக நிரூபிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருவேளை முழுமையாக குணமடையாமல் ஒற்றைக் காலில் வந்தாலும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்தை விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுலையும் நான் விக்கெட் கீப்பராக பார்க்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக ஒருவேளை ரிஷப் பந்த் ஒரு காலில் விளையாடும் அளவுக்கு ஓரளவு ஃபிட்டாக இருந்தாலும் அவர் அணிக்குள் வரவேண்டும். ஏனெனில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேம் சேஞ்சராக செயல்பட கூடியவர். எனவே நான் தேர்வுக்குழுவில் இருந்தால் அவருடைய பெயரை தான் முதலில் போடுவேன். ஒருவேளை பந்த் தயாராகவில்லையெனில் கேஎல் ராகுல் கீப்பராக செயல்படலாம்

அவர் கீப்பராக செயல்படுவது சமநிலையையும் ஏற்படுத்தும். மேலும் அவரை நீங்கள் தொடக்க வீரராக அல்லது 5, 6 ஆகிய மிடில் ஆர்டர்களில் அல்லது ஃபினிஷராக கூட பயன்படுத்தலாம். தற்போது அவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் நல்ல முன்னேற்றத்தை கண்டு முழுமையான விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு வீரர்களிடம் போட்டி இருப்பது நல்லதாகும். ஜித்தேஷ் சர்மாவும் அதிரடியாக ஃபினிஷிங் செய்யக்கூடியவர்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை