ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை! 

Updated: Thu, Sep 21 2023 16:10 IST
ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!  (Image Source: Google)

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. மேலும் கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக்கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.     

அதேசமயம் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக, கொஞ்சம் பலவீனமாக காணப்பட்ட இந்திய அணி, ஆசியக் கோப்பைக்கு பின்பாக மிக பலமான அணியாகத் தெரிகிறது. அணியின் பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரைத் தவிர வாய்ப்பு பெற்ற அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது வேலையைச் செய்திருக்கிறார்கள். அதேபோல பந்துவீச்சில் வாய்ப்பு பெற்ற அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்திய அணி உலகக்கோப்பையில் மிக வலுவான பந்துவீச்சு யூனிட்டை கொண்டிருக்கும் அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் பேட்டிங்கிலும் சிறப்பான ஒரு அணியாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ஷுப்மன் கில், ஆசிய கோப்பையிலும் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக அசத்தினார்.

இந்த நிலையில் ஷுப்மன் கில் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “கில் மனநிலை இத்துடன் நிற்காது. 2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை அவராலும் செய்ய முடியும். அவர் பேட்டிங் செய்ய 50 ஓவர்கள் கிடைக்கும். எனவே அவர் பேட்டிங்கில் இது டேக் ஆப் பாயின்ட் என்று நினைக்கிறேன். அவரிடம் இயல்பாகவே தலைமை குணம் இருக்கிறது. அதை அவர் தனது விளையாட்டில் காட்டுகிறார்.

 

Suresh Raina Feels Shubman Gill can do what Rohit Sharma achieved in 2019! #CWC23 #WorldCup #RohitSharma #ShubmanGill pic.twitter.com/o1OmyYKt6J

— CRICKETNMORE (@cricketnmore) September 21, 2023

அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக சிறந்த செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். நடுவில் வெஸ்ட் இண்டிஸ் தொடரில் கொஞ்சம் தடுமாறினார். அவர் திரும்பி வந்து ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த விதம், அவர் நேர்மறையாக இருக்கிறார் என்று காட்டுகிறது. தற்பொழுது அவர் 40 ரன்களில் ஆட்டம் இழப்பதை தவிர்த்து ஃபுட் ஒர்க்கை நன்றாக பயன்படுத்தி 50 மற்றும் 100 ரன்களுக்கு செல்கிறார். உலகக்கோப்பையில் இவர் முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பார்.

அவர் சூப்பர் ஸ்டாராக வேண்டும் அடுத்த விராட் கோலி ஆக வேண்டும் என்று விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும். இந்த உலகக் கோப்பைக்கு பிறகு நாம் அவர் குறித்து அதிகம் பேசுவோம். அவர் நன்றாக ஃபார்மில் இருக்கும் பொழுது அவருடைய கை வேகம் அபாரமாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அவருக்கு எங்கு பந்து வீசுவது என்று தெரியவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யவில்லை என்றால், அவர் நேராகவோ அல்லது பிளிக் ஆகி விடுவார். அவரை தடுப்பது மிகவும் கடினமானது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை