விராட் கோலி தனது மகத்துவத்தை காட்டுவார் - வாசிம் ஜாஃபர்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் செயல்பாடுகள் பெரிதளவில் சோபிக்க தவாறி வருவது பெரும் விமசனங்களை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் ஒரு சில ரன்களையாவது செர்த்த நிலையில், அமெரிக்க அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறி வருகிறார்.
மேற்கொண்டு கடந்த இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் அமெரிக்க அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இருப்பினும் அவர்களது செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்பதால் இந்திய அணியின் பேட்டிங் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது உண்மையான திறனையும், தனது மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்வ்மாவும், விராட் கோலியும் பேட்டிங் செய்ய கடினமான நியூயார்க் ஆடுகளத்தில் விளையாடி வருவதால் அவர்கள் அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் இல்லை.
அதனால் விராட் கோலியைப் பற்றி இப்போதே எதேனும் எழுத வேண்டாம். இத்தொடர் முடிவை நெருங்கும் போது அவர் தனது உண்மையான நிறத்தைக் காட்டுவார், மேலும் அவர் தனது மகத்துவத்தைக் காட்டுவார். மேலும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளேன். அதனால் நிச்சயம் நான் அந்த இடத்தில் அவருடன் உறுதியாக இருப்பேன்.
மேலும் விராட் கோலி 3ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் தொடர்ந்து ஓப்பனிங் தான் செய்ய வேண்டும், ஏனென்றால் இப்போது ரிஷப் பந்தை மூன்றாம் இடத்தில் களமிறக்கி வருவதுடன், அது நன்றாகவும் வேலை செய்து வருகிறது. மேலும் ஜெய்ஸ்வால் அணியில் இருந்தாலும் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் விராட் கோலி நிச்சயம் தொடக்க வீரராக மட்டுமே விளையாடுவார்.
மேற்கொண்டு 4ஆவது இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் ஷிவம் துபேவுக்கு ஓரிரு ஆட்டங்கள் மட்டுமே கிடைத்துள்ளன, மேலும் அவருக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க அணி நிர்வாகம் விரும்புகிறது. அதனால் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவாரா போன்ற் முடிவுகள் குறித்து அணி நிர்வாகம் யோசிக்க வேண்டியதும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.