டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் தலைமை பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
Trinbago Knight Riders: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பாவான் மற்றும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ நியமிக்கப்படுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகெங்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கென தனி டி20 பிரீமியர் லீக்குகளை தொடங்கி நடத்தி வருகின்றன. அந்தவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் எனும் டி20 தொடரை நடத்தி வருகிறது. இத்தொடரில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13ஆவது சீசனானது ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் கரீபியன் பிரீமிய்ர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
டுவைன் பிராவோ கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சிபிஎல் தொடரில் விளையாடிய நிலையில் அதில் 11 சீசன்களில் அவர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி 5 முறை கோப்பையையும் வென்றுள்ளார். அதேசமயம் கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஎல் தொடரில் அவர் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎல் தொடரை பொறுத்தவரையில் டிவைன் பிராவோ 107 போட்டிகளில் விளையாடி அதில் 1155 ரன்களையும், 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதுபோன்ற சூழலில் தான் தற்சமயம் டுவைன் பிராவோ டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிர்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இவர் ஐபிஎல் தொடரிலும் நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகவும் செயல்பட்டார்.
Also Read: LIVE Cricket Score
இதுகுறித்து பேசிய டுவைன் பிராவோ, "என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் தலைமை பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த ஒரு மரியாதை. கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் அளித்த நேரம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் எனக்கும் எனது ஊழியர்களுக்கும் இந்த புதிய சவாலை நான் இப்போது எதிர்நோக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.