அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வெற்றி அணிவகுப்பையும் மேற்கொண்டது.
அதன்படி இந்திய வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய படி திறந்தவெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணியும் நடைபெற்றது. அதன்பின் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடிக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜொய் ஷா வழங்கினார்.
இந்நிலையில் இந்நிகழ்சியை முடித்த கையோடு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டன் சென்றுள்ளார். அதன்படி விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா மற்றும் அவரது மகள் வாமிகா, மகன் அகாய் ஆகியோர் லண்டனில் இருப்பதன் காரணமாக அவர் தனி விமானம் மூலம் அங்கு சென்றுள்ளார். முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது அனுஷ்கா சர்மா அங்கு வந்திருந்தார். அதன்பின் அவர் லண்டன் திரும்பிய காரணத்தால், தற்போது விராட் கோலியும் லண்டனுக்கு சென்றுள்ளார்.
முன்னதாக நடந்துமுடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி 76 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி வென்றார். அதன்பின் ஆட்டநாயகன் விருது பெற்றபின் பேசிய விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவையும் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். மேலும் இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒரு சதம், 38 அரைசதங்கள் உள்பட 4,188 ரன்களைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.