மீண்டும் சொதப்பிய விராட் கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

Updated: Sat, Jul 09 2022 21:45 IST
Virat Kohli Throw His Wicket On 3rd Ball Against England In 2nd T20 Watch (Image Source: Google)

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் திணறி வருவதால் அவருடைய ஃபார்ம் முடிவுக்கு வந்தது. இனி அவரால் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பவே முடியாது என்று பலரும் கூறி வருகின்றனர். 

ஆனால் விராட் கோலியின் ரசிகர்களும், அணியின் நிர்வாகமும் அவரின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவர் ஃபார்மிற்கு வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகவும் மோசமான ஆட்டத்தினால் பார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி எப்படியாவது இந்த சரிவிலிருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியிலும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதோடு தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் ஓய்வெடுத்த அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாட இருப்பதினால் இந்த இரண்டாவது போட்டியிலாவது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டி20 போட்டியிலும் அவர் மூன்று பந்துகளை சந்தித்து ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியது ரசிகர்களிடையே மிக பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக விராட் கோலி சொதப்பி வருவதால் அவர் மீதான எதிர்பார்ப்பிற்கு அர்த்தமே இல்லாமல் செல்கிறது. 

அதன்படி பர்மிங்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது 171 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்கினை துரத்தி வருகிறது.

 

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கி சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தாலும் 3 ஆவது வீரராக களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி மீண்டும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியது அவரது இடத்திற்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இளம் வீரர்கள் பலரும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட காத்திருக்கும் வேளையில் கோலியின் இந்த தொடர் சொதப்பல் தற்போது அவரது இடத்தை இழக்கும் அபாயத்திற்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை