WCL 2024: இங்கிலாந்து சம்பியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Wed, Jul 03 2024 21:26 IST
WCL 2024: இங்கிலாந்து சம்பியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி! (Image Source: Google)

முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ள லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை எதிர்த்தி இந்திய சாம்பியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் கெவின் பீட்டர்சன் - பில் மஸ்டர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கெவின் பீட்டர்சன் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மஸ்டர்டும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவி போபாராவும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணியும் 60 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் இணைந்த இயன் பெல் - சமித் படேல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சமித் படேல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இயன் பெல் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இந்திய சாம்பியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா மற்றும் நமன் ஓஜா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் நமன் ஓஜா 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த ராபின் உத்தப்பாவும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்த கையோடு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, கேப்டன் யுவராஜ் சிங் ஆகியோரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த குர்கீரத் சிங் - இர்ஃபான் பதான் இணை ஓரளவு தாக்குப்பிடித்துடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்கீரத் சிங் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களிலும், இர்ஃபான் பதான் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 22 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த வினய் குமாரும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இருப்பினும் இறுதியில் யூசுஃப் பதான் 5 ரன்களையும், ஹர்பஜன் சிங் சிக்ஸர் விளாசியும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய சாம்பியன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய சாம்பியன்ஸ் அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை