இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்கு தான் - ரஷித் கான்!

Updated: Fri, Jun 21 2024 11:25 IST
இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்கு தான் - ரஷித் கான்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அந்த அணியில் அதிகபட்சமாகவே அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 26 ரன்களையும், நஜிபுல்ல ஸத்ரான் 19 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்போட்டி முடிவுக்கு பின் தோல்வி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான், “இந்த மைதானத்தில் 170-180 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான் என்று நினைத்தோம். ஏனெனில் நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.

அதிலும் பெரிய அணிகளுக்கு எதிராக, இத்தகைய ஸ்கோரைத் துரத்த வேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். முன்னதாக ஐபிஎல் தொடரில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் தற்போது நான் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறேன். நாங்கள் விளையாடிய எல்லா இடங்களையும் ரசித்துள்ளோம். சில சமயம் நம் திறமையை மறந்து விடுகிறோம். எங்களுக்கு ஏற்றது போன்ற மைதானமகாக இருந்தால், அதை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை