வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களில் ஆல் அவுட்டாக, அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களில் ஆல் அவுட்டாக, தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநயாகன் விருதை வியான் முல்டரும், தொடர் நாயகன் விருதை கேசவ் மஹாராஜும் கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாகவே தோல்வியடைந்தோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிராத்வைட், “இந்த போட்டியில் எங்களது பேட்டிங் முதல் இன்னிங்ஸின் மிகவும் மோசமாக இருந்தது. முதல் நாள் பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். மேலும் இப்போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. மேலும் பேட்டிங்கில் மோட்டி மற்றும் கீழ் வரிசையில் இருந்து வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்தனர்.
முதல் இன்னிங்ஸில் நாங்கள் சில அதிரடியான ஷாட்களை விளையாடினோம். எங்களது முதல் இன்னிங்ஸ் முக்கியமானது. டாஸ் இழந்த பிறகு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் பந்துவீச்சில் நாங்கள் கடுமையாக போராடினோம். எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர்கள். அதனால் இனி வரும் காலங்களில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.