ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்!

Updated: Thu, May 23 2024 20:56 IST
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.

அந்தவகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 741 ரன்களுக்கு மேல் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். 

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக விராட் கோலி தான் களமிறங்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேலும், நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக மட்டுமே விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “விராட் கோலி தற்போது இருக்கும் ஃபார்மில், டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி, கடந்த 17 ஆண்டுகால கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருவதற்கு முற்றுப்புள்ளி வத்து,  இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள கால சூழ்நிலைகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளன.

அதிலும் குறிப்பாக அங்குள்ள மைதானங்களில் 4 முதல் 5 ஆவது ஓவரிலேயே பந்து பழையதாக மாறிவிடும் என்பதால், அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் ஆதரவைக் கொடுக்கும். எனவே, நான்கு சுழல் பந்துவீச்சாளர்களுடன் நாம் இந்த தொடரை எதிர்கொள்வது மிகவும் நல்ல முடிவு என்று நான் நினைக்கிறேன். யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருவதால் அது இந்திய அணிக்கு பெரும் சதகமாக அமையும் என நம்புகிறேன்.

மேலும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் தேர்வாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் தனது பேட்டிங்கின் மூலமும், அவரது கேப்டன்சி மூலமாகவும் அணிக்கு பெரும் பங்களிப்பை வாழங்குவார். எனவே இந்தியா அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை