பாகிஸ்தான் மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்தது. அதன்படி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கிஷோனா நைட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஸ்டேஃபோனி டெய்லர் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் 49 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிஷோனா நைட் 88 ரன்களை சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபாதிமா சனா, நஷ்ரா சாந்து தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி சித்ரா அமீன் - ஒமைமா சொஹைல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இதில் ஒமைமா சொஹைல் அரசதம் கடந்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 48.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஃபாதிமா சனா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.