ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்து களமிறங்கிய அன்னேக் போஷ் ரன்கள் ஏதுமின்றியும், சுனே லூஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மரிஸான் கேப்பும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்வார்ட் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேற்கொண்டு இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 169 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சோளே டிரையானும் அதிரடியாக விளையாடினார். 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோளே டிரையான் 33 ரன்களையும், நதின் டி கிளார்க் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீராங்கனிகள் ஏமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் இணைந்த கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் - அலிஸ் கேப்ஸி இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 64 ரன்களில் நாட் ஸ்கைவர் பிரண்டும், 50 ரன்களில் அலிஸ் கேப்ஸியும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் டேனியல் வையட் ஹாட்ஜ் 34 ரன்களையும், லின்ஸி ஸ்மித் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Also Read: LIVE Cricket Score

இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிஸான் கேப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் முறையாக முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News